மும்பை பொருளாதாரத்தின் ஒரு வரப்பிரசாதம்..! – முழு விபரம்

மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL) அல்லது அடல் சேது என அழைக்கப்படும் இந்தக் கடல் மீது அமைந்திருக்கும் பிரம்மாண்ட சாலை திட்டம் மும்பையில் உள்ள செவ்ரி மற்றும் நவா-ஷேவாவுடன் இணைக்கிறது.
இது மும்பைக்கும் – நவி மும்பைக்கும் இடையே விரைவான இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாபெரும் திட்டத்தைப் பிரதமர் இன்று திறந்துவைக்கும் வேளையில் இந்தத் திட்டம் ஏன் மிகவும் முக்கியம்..? இந்தத் திட்டத்தின் மூலம் மும்பைக்கும், மும்பை மக்களுக்கும், மும்பை பொருளாதாரத்திற்கும் என்ன லாபம் வாங்கப் பார்ப்போம். மகாராஷ்டிராவில் அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார். சுமார் ₹17,840 கோடி செலவில் கட்டப்பட்ட அடல் சேது திட்டம், நாட்டின் மிக நீளமான பாலமாகவும், நாட்டின் மிக நீளமான கடல் பாலமாகவும் உள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானத்திற்கு அடிக்கல் 2016 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டப்பட்டது. இது 21.8 கிமீ நீளமுள்ள ஆறுவழிப் பாலமாகும், இது கடலின் மேல் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் 5.5 கிமீ நீளமும் கொண்ட பிரம்மாண்ட பாலமாக அமைந்துள்ளது. அடல் சேது திட்டத்தின் மூலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். இது மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்குப் பயண நேரத்தையும் பெரிய அளவில் குறைக்கும். இது மும்பை துறைமுகத்திற்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும். இந்த அடல் சேது பாலத்தில் பயணிக்க ஒரு வழி கட்டணமாகக் காருக்கு 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ரிட்டன் பயணங்களுக்கான கட்டணம் மற்றும் தினசரி மற்றும் அடிக்கடி பயணிக்கும் கட்டணங்கள் ஆகியவை மாறுபடுகிறது. இந்த அடல் சேது பாலத்தின் மூலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் தெற்கு மத்திய மும்பையில் உள்ள செவ்ரி இடையேயான தூரம் 15 கிலோமீட்டர் குறைகிறது. மேலும் பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரத்திலிருந்து 15 முதல் 20 நிமிடங்களாகக் குறையும் எனவும் தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *