ராமர் கோயில் திறப்பு: பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த மக்கள் கூட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையடுத்து, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனத்துக்காக இன்று கோயில் திறக்கப்பட்டது. பிராண பிரதிஷ்டையின் போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என சுமார் 8000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்காக கோயில் இன்று திறக்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கானவர்கள் குழந்தை ராமரை தரிசிக்க குவிந்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அத்துமீறி உள்ளே நுழையாத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், கூட்ட மிகுதியால், தடுப்புகளை உடைத்து அடித்து பிடித்துக் கொண்டு பொதுமக்கள் கோயிலின் உள்ளே நுழைந்தனர்.

முன்னதாக, காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் தரிசனத்துக்காக ராமர் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *