மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்! ஒரே மாதத்தில் 3வது முறை!

ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக, மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் (Facebook), மெசெஞ்ர் (Messenger) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) அப்ளிகேஷன்கள் திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக தளங்களை அணுக முடியவில்லை என்று பல பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.

உலகளாவிய அளவில் இந்த திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் குறை கூறுகின்றனர். கோடிக்கணக்கான பயனர்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் செயலிகளை பயன்படுத்த முடியவில்லை என்று சொல்கின்றனர்.

இந்திய நேரப்படி இரவு சுமார் 8 மணியில் இருந்து இந்த எதிர்பாராத தடையை சந்தித்து வருவதாக பயனர்களின் புகாரில் இருந்து அறிய முடிகிறது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பயனர்கள் இதேபோன்ற புகார்களைக் கூறியுள்ளனர். ஆசியாவின் பெரும் பகுதியிலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் முடக்கத்தைக் கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் இணையதளத்தில் பதிவாகியுள்ள தகவலின்படி, ஏறக்குறைய 60% பயனர்கள் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன்களில் லாக்இன் செய்வதில் சிரமம் இருப்பதாக புகார் கூறுகின்றனர். சமார் 26% பேர் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சில பயனர்கள், இந்த தளங்களில் வெவ்வேறு வசதிகளை பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் பலர் தங்களது லாக்இன் செஷன் முடிந்துவிட்டதாக பாப்-அப் மெசேஜ் தோன்றியது எனக் குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் பலமுறை முயற்சி செய்தும் லாக்-இன் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பல பயனர்கள் ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற பிற சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு வரும் பிரச்சினை பற்றி புகார் கூறி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *