விமானத்தில் ஜெனீவா புறப்பட்ட பயணிகள்… ஒரே நாளில் அடுத்தடுத்து உருவான பிரச்சினைகள்

மொராக்கோ நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்ட பயணிகள், அன்று ஒரே நாளில், தாங்கள் இத்தனை பிரச்சினைகளை சந்திப்போம் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.

மொராக்கோவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்ட பயணிகள்

நேற்று முன்தினம், அதாவது, ஜனவரி மாதம் 9ஆம் திகதி, மாலை 7.00 மணி வாக்கில், மொராக்கோ நாட்டிலுள்ள Marrakech என்னுமிடத்திலிருந்து, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நோக்கி விமானம் ஒன்று புறப்படத் தயாரானது. ஆனால், வானிலை காரணமாக உடனடியாக விமானம் புறப்படமுடியாததால், பயணிகள் விமான நிலையத்திலேயே ஒன்றரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

அடுத்தடுத்து தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகள்

சரி, ஒரு வழியாக ஒன்றரை நேரத்திற்குப் பிறகாவது விமானம் புறப்பட்டதே என மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட, நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே, பயணி ஒருவர் குடிபோதையில் கலாட்டா செய்ய, Madrid விமான நிலையத்தில் விமானத்தை இறக்கி, அந்தப் பயணியை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் விமானம் புறப்பட்டது.

இதனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேல், மீண்டும் பயணிகள் விமானத்தில் காத்திருக்கவேண்டியதாயிற்று.

இதற்கிடையில், மற்றொரு பயணி போய் கழிவறையில் உட்கார்ந்துகொண்டு சிகரெட் பிடிக்கத் துவங்க, விமானம் புறப்படுவது மேலும் தாமதமாயிற்று.
சரி, விமானம் புறப்பட்டாயிற்று, ஜெனீவாவில் இறங்கப்போகிறோம் என பயணிகள் காத்திருக்க, ஜெனீவா விமானம் மூடப்பட்டிருப்பதாக தகவல் வர, ஜெனீவாவுக்கு பதிலாக Lyon விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானம்.

பின்னர் Lyonஇலிருந்து பேருந்து மூலம் ஜெனீவாவுக்கு அழைத்துவரப்பட்டார்கள் பயணிகள். மொத்தத்தில், மறுநாள் காலை 5.00 மணிக்குத்தான் அவர்களால் ஜெனீவாவை வந்தடைய முடிந்தது!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *