ஸ்ரீ ரங்கம் கோயிலில் வேஷ்டி, சட்டையில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். நேற்று சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர் இன்று திருச்சி சென்றார்.

உலக பிரசித்தி பெற்றதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார்.

தெற்கு கோபுர வாசல் வழியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரணக்கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கருடாழ்வார், தாயார், மூலவர் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அதே போல் சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மௌத் ஆர்கன் வாசித்து காண்பித்தது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்டார்.

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்த போது பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தார்.

பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் 2.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *