RC 16 Movie Pooja: ராம் சரண் – ஜான்வி கபூர் இணையும் ‘RC 16’ திரைப்படம் பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கியது!

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கட சதீஷ் கிலாறு திரைப்படங்கள் மீதான அவரது பிரத்யேகமான ஆர்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர்.‌ மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கி பழகிய பிறகு, அவர் ஒரு உயரிய தயாரிப்பு தரத்துடன் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் தனித்துவமிக்க முடிவை மேற்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான ‘RC 16’ படத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரும் இணைந்தனர்.‌ தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர். இப்படத்தை தனது முதல் திரைப்படமான ‘உப்பென்னா’ படத்திற்காக தேசிய விருதை வென்ற இயக்குநரும், பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார்.‌

மேலும் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ‘RC16’ படத்தின் தொடக்க விழாவில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குநர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாஹூ கராபதி, ராம் அச்சந்தா, எம்எல்ஏ ரவி கோட்டிபட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

காலை 10 :10 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் பாரம்பரிய பூஜையுடன் விழா தொடங்கியது. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் படத்தின் ஸ்கிரிப்டை இயக்குநர் புச்சி பாபு சனாவிடம் ஒப்படைத்தார். ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கும் நட்சத்திர இயக்குநர் ஷங்கர் முதல் காட்சியை இயக்க, போனி கபூர் மற்றும் அன்மோல் சர்மா கேமிராவை சுவிட்ச் ஆன் செய்ய, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்தனர்.

இதை தொடர்ந்து இப்படம் குறித்து பேசிய ராம் சரண், புச்சி பாபுவின் சினிமா மீதான அதீத காதலை பாராட்டி அவருடனும்.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடனும் இணைந்து பணிபுரிவது, தனக்கு கிடைத்த பெருமை எனத் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறையாக ஜான்வி கபூருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராம் சரண், அவரது தந்தை சிரஞ்சீவியும், ஜான்வி கபூரின் தாயார் ஶ்ரீதேவியும் இணைந்து நடித்த “ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி” படத்தினை நினைவு கூர்ந்தது, நானும் ஜான்வி கபூரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள் இப்போது அது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகிய இயக்குநர் புச்சிபாபுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். பட குழுவினரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்றார். இவரை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் போனி கபூர் , ” ராம் சரண் கொடுத்த வாய்ப்பின் மூலம் தெலுங்கு படங்களை தயாரிக்கும் ஆர்வத்தை பெற்றிருக்கிறேன். புச்சிபாபுவின் ‘உப்பென்னா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறேன்” என்றார். எனவே விரைவில் ‘உப்பென்னா’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *