பொங்கலுக்கு பட்டாசு வெடித்த ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் – 6, 6, 4, 4, 4, 6, 6, 6ன்னு பறந்த பந்து – இந்தியா வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க ஜத்ரன் 8 ரன்களில் நடையை கட்டினார்.

அடுத்து வந்த குல்பதீன் நைப் அதிரடியை காட்ட ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தாலும் நைப் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த போது அக்‌ஷர் படேல் வர வைத்து அவரது கேட்சை பிடித்தார் ரோகித் சர்மா.

பின்னர் வந்த நஜிபுல்லா ஜத்ரன் 23 ரன்களும், கரீம் ஜனத் 20 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்துக் கொடுக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 29 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரும் சரவெடியாக வெடித்து ரன்கள் குவித்தனர். ஷிவம் துபே மட்டும் ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசவே இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே தன் பங்கிற்கு 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசியாக இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில், அவர் 4 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசியுள்ளார். இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவில் நடக்க இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *