இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சி… ரம்பா, தமன்னாவை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்

இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நிகழ்ச்சி நடத்துவது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், இளையராஜா, வித்தியாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என ஏராளமானோர் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்களது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிகளில் சில குளறுபடிகளும் நடப்பதுண்டு. கடந்த ஆண்டு சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி அதற்கு உதாரணம். அந்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் அதில் சிக்கி கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதில் சில பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த இசை நிகழ்ச்சி கடும் சர்ச்சையான நிலையில், இதற்கு மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரகுமான், இதில் டிக்கெட் வாங்கி கலந்துகொள்ள முடியாமல் போனவர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்தார். தற்போது இப்படி ஒரு சம்பவம் தான் இலங்கையில் நடந்துள்ளது. பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் நடைபெற்றது.

இதில் நடிகைகள் ரம்பா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, நடிகர்கள் மிர்ச்சி சிவா, யோகிபாபு, சாண்டி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கினார். இந்த இசை நிகழ்ச்சியை காண அதிகளவிலான கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாலேயே இந்த குளறுபடி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *