இலங்கை மீண்டும் அடாவடி! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

நடுக்கடலில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கொடுமைகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. தமிழக மீனவர்களைத் தாக்குவதும் கைது செய்து கூட்டிச் சென்று சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக உள்ளது. கைதாகும் மீனவர்களின் படகுகள், வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் அபகறித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் சனிக்கிழமை இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் வங்கக்கடலில் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்றும் தங்கள் நாட்டு எல்லைக்கு வந்ததால் அவர்களைக் கைது செய்திருப்பதாகவும் இலங்கை கடற்படையினர் கூறியுள்ளனர்

மத்திய அரசு தலையிட்டு கைதான அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகள் உள்ளிட்ட உடைமைகளையும் மீட்டுத் தர வேண்டும் என்று புதுக்கோட்டை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகிவரும் நிலையில், இந்தக் அட்டூழியம் நடந்திருப்பது புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *