படுகொலை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல் புத்தக பை, பொம்மையுடன் நல்லடக்கம்..!

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் புதுச்சேரி முழுவதும் சிறுமி கொலைக்கு நீதிகேட்டு போராட்டம் வெடித்தன. இதற்கிடையே சிறுமியின் தந்தையை சந்தித்த முதல்வர் ரங்கசாமி சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தருவோம் என்று தெரிவித்தார். மேலும் அரசு சார்பாக ரூ.20 லட்சம் நிவாரண நிதியையும் அவர் சிறுமியின் தந்தைக்கு வழங்கினார்.

இதற்கிடையே நேற்று, உடல் அடக்கம் செய்வதற்காக சிறுமியின் இல்லத்தில் இருந்து மயானத்துக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 10 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மயானத்தை அடையும் முன்பாக வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் பாப்பம்மாள் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடலுடன் அவரின் புத்தகப்பை பை மற்றும் பொம்மைகள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் சேர்த்து புதைக்கப்பட்டன. முன்னதாக, நேற்று காலை புதுச்சேரி மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று முன்தினம் இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து இந்தக் குழு, சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்று கொண்டு, விசாரணையை நேற்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி கொலை செய்யப்பட்ட விவேகானந்தன் வீட்டில், நேற்று காலை தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்குள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விசாரணை தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் சந்தேகப்படக்கூடிய ஐந்து நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக, ஜிப்மர் ஆய்வுகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது என்று குறிப்பிட்டனர். இதற்கிடையே, சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *