மும்மொழிக் கொள்கை: அண்ணாமலை – பி.டி.ஆர். வார்த்தைப் போர்

தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ தொழில்நுட்பம் பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளில் ஏ.ஐ தொழில்நுட்பம் பற்றி கற்பிக்கப்பட உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம் பற்றி கற்பிக்க தமிழக அரசு டீல்ஸ் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது என்றும் விரைவில் தி.மு.க அரசு மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சிலர் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறுவது நகைப்புக்குரியதே என்று தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்து, மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் தி.மு.க அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க கொண்டிருக்கும் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் திமுக அரசுக்கு,

தமிழக பா.ஜ.க சார்பாக நன்றி கூறியிருந்தோம். எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக தி.மு.க ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சமீப காலமாக, தி.மு.க கட்சியின் பெயரில் வெளிவர வேண்டிய அறிக்கைகள் எல்லாம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பெயரில் வெளிவருவதில் பெரிய ஆச்சரியமில்லை. இன்னும் சில நாட்களில், தி.மு.க கட்சி உள்விவகாரங்களான, பிரியாணி கடையில் தகராறு செய்த தி.மு.க நிர்வாகி, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் போன்ற தகவல்கள் கூட, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியே மக்களுக்கு அறிவிக்கப்படலாம். தி.மு.க-வின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல.

அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டிற்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான். தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா?

கேள்விக்கு நேரடி பதில் சொல்ல முடியவில்லை என்றால், பழம்பெருமை பேசுவது தி.மு.க-வுக்கு வழக்கம். பெரியார் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற 1970-ம் ஆண்டு என்பதற்குப் பதிலாக 1920-ம் ஆண்டு என்று மற்றொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐபிஎம் 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்து என்று தி.மு.க கூறுகிறதா? பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும். அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது.

1967-ம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது.

இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று திமுக அரசைக் கேட்டுக் கொள்வதோடு, புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக,

தமிழக பா.ஜ.க சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு தி.மு.க அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிலடி கொடுத்து, கடுமையாகச் சாடியுள்ளார்.

அண்ணாமலை நமது வளர்ந்த மாநிலத்தில் தனது பிரச்சாரத்தை மேலும் தொடர ஒரு வீண் முயற்சியில் அரை உண்மைகள், திரிக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் முழுப் பொய்களைக் கொண்டு வழக்கமாகப் பிரச்சாரம் செய்பவர் – நமது மொழிக் கொள்கைக்கான அரசியல் காரணங்களைக் கொண்ட முடிவை விட்டுவிட்டார்.

இந்த சம்பவத்தின் முழு விவரங்களும் ஏற்கனவே அச்சு மற்றும் காணொளி வடிவில் ஆன்லைனில் பரவலாக வெளியிடப்பட்டிருக்கும் போது, ​​அவரது பதிவில் உண்மை இருப்பதாக புகழ்பாடும் மனநிலையில் உள்ளவர்கள் மட்டுமே நம்புவார்கள். பதிவிடுவதற்கு முன் அவருக்கு சரியாகத் தெரிவிக்கத் தவறியிருந்தால் அல்லது தவறாக வழிநடத்தும் விஷயங்களைப் பரப்பக்கூடாது என்பதில் ஏதேனும் அக்கறை இருந்தால்….

மேலும், யாரும் வெளியேற்றப்படவில்லை. ஒவ்வொரு முறையும் நான் “காத்திருங்கள்” என்று சொல்லும் போது, ​​​​கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நபர் தனது இருக்கைக்குத் திரும்பி, எனது அமர்வு முடியும் வரை அங்கேயே இருந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த அமர்வுகளிலும் கலந்து கொண்டார்.

இதற்குப் பிறகு இன்னும் பல தமிழக பா.ஜ.க தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது. கட்டாய மும்மொழிக் கொள்கையை ஏற்காது. ஹிந்தி பெல்ட் மாநிலங்களின் தாய்மொழிகளுக்கு நடந்ததைப் போல, இந்தி மொழியை நம் தொண்டைக்குள் திணிக்கவும், நம் தாய் தமிழைக் குறைப்பதற்குமான வழி என்று கூறுகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *